Tuesday, October 30, 2012

புத்தாண்டில் ஒரு புதிய....

புத்தாண்டு என்றாலே முதலில் நினைவு வருவது (காலண்டரையும், டயரியையும் தவிர) புத்தாண்டுத் தீர்மானங்கள்தான். புத்தாண்டுத் தீர்மானங்கள் பெரும்பாலும் மீறுவதற்கென்றே செய்யப்படுபவை - தேர்தல் வாக்குறுதிகளைப்போல. புத்தாண்டுத் தீர்மானம் என்பது ஜோக் எழுதுவதற்கான ஒரு விஷயம் என்றே ஆகி விட்டது. இதைப்பற்றிக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் என்ன?

புத்தாண்டு தினம் இன்று அனைவர்ரலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றே சொல்லலாம். கால ஓட்டத்தில் வந்து போகும் கணக்கற்ற நாட்களில் புத்தாண்டு தினமும் ஒன்று என்ற உண்மையையும் மீறி, இந்த தினம் நம்மில் பலரிடையே பெரும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.தினசரி வாழ்வில் எவ்வளவோ முயன்றும் எளிதில் வசப்படாத இந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியான எதிர்பார்ப்பையும், நம்பிக்கை நிறைந்த மனப்போக்கையும் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணாக்கலாமா?

இந்த நோக்கில் பார்க்கும்போது, புத்தாண்டுத் தீர்மானங்கள் பெரிய விஷயமாகத் தோன்றுகின்றன. வரப்போகும் ஆண்டில் நான் என்ன செய்யப் போகிறேன், எப்படி என்னை மாற்றிக் கொள்ளப்போகிறேன், எத்தகைய இலக்குகளைக் குறிவைத்து நடக்கப் போகிறேன் என்றெல்லாம் நமக்கு நாமே செய்து கொள்ளும் உறுதிகளை நம்மால் நிறைவேற்ற முடிந்தால், வாழ்க்கைப் பாதையில் விரைந்து முன்னேறுவது என்பது நமக்கு ஒரு இயல்பான ஒரு விஷயமாகி விடும்.

ஆனால் நம்மில் பலருக்கு இது முடியாத விஷயமாகப் போய்விடுகிறது. தீர்மானங்களை இயற்றுவதில் இருக்கும் தீவிரம் அவற்றைச் செயல்படுத்துவதில் இருப்பதில்லை - நமது ஐந்தாண்டுத் திட்டங்களைப்போல! புத்தாண்டு பிறந்து ஓரிரு வரங்களுக்குள்ளேயே நமது உற்சாகமும், தீவிரமும் மார்கழிப்பனி தையில் மறைந்து விடுவதுபோல் மங்கி ஒடுங்கி விடுகின்றன.

இதற்குக் காரணம் என்ன என்று யோசிப்பதை விட, இதற்கு மாற்று என்ன என்று யோசிப்பது சுலபமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

நீங்கள் புத்தாண்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளும் வழக்கம் உள்ளவராக இருந்தால், ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு, இந்த வருடம் நீங்கள் எடுத்துக் கொண்ட தீர்மானங்கள் என்ன, சென்ற வருடம் மேற்கொண்ட தீர்மானங்கள் எவை, அதற்கு முந்திய வருடம்..என்று நினைவு படுத்திக்கொண்டு ஒரு பட்டியலிடுங்கள்.

உங்களால் இவற்றை நினைவு கூர முடிந்தால் கொஞ்சம் ஆச்சரியமான ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள்.

சென்ற ஆண்டு எந்தத் தீர்மானங்களை  மேற்கொண்டீர்களோ அதே தீர்மானங்களைத்தான் (ஒரு சில மாற்றங்களுடன்) இந்த ஆண்டும் எடுத்துக் கொண்டிருப்பீர்கள். மிகப் பெரும்பாலோனோர் விஷயத்தில் இப்படித்தான் இருக்கும்.

திட்டமிட்டு வாழ்வில் முன்னேறும் ஒரு சிலரைப் ப்ற்றி நான் இங்கே கூறவில்லை. அது போன்ற சிலர் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்து, நான் மேலே குறிப்பிட்டுள்ள கருத்தைக் கடுமையாகச் சாட நினைத்தால், என்னுடைய பணிவான வணக்கங்களைப் பெற்றுக்கொண்டு இத்துடன் இந்தக் கட்டுரையைப் படிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். இது ஒரு சராசரி மனிதனின் அனுபவத்தின் அடிப்படையில் அவன் போன்ற மிகப் பெரும்பான்மையான சராசரி மக்களுக்காக அவனால் எழுதப்படுவது.

எனவே, சராசரிகளே! நாம் என்ன செய்கிறோம் என்றால் நேற்று கொஞ்சம் மாவை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்தோம். இன்று அந்த மாவை வெளியே எடுத்து மீண்டும் அதை அரைக்கிறோம். நாளை மீண்டும்.... மொத்தத்தில் அதே மாவுதான் திரும்பத் திரும்ப அறைக்கப்படுகிறதே தவிர, அதிலிருந்து இட்லியோ, தோசையோ உருவாக்கப் படுவதில்லை.

சென்ற ஆண்டு மிகுந்த அக்கறையுடன் நாம் செய்து கொண்ட தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல், இந்த ஆண்டு அவற்றையே மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டிலும் இவை புதுப்பிக்கப் பட்டவைதான்.

"ஒவ்வோரு ஆண்டும் அதே தீர்மானங்களைத்தான் எல்லோருமே மேற்கொள்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சிலர் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகத் தீர்மானங்கள் செய்து கொண்டு  அவற்றைக் காற்ற்ரில் பறக்க விடுபவர்களாக இருக்கலாமே  என்று சில சிந்தனையாளர்களுக்கு (அதாவது உங்களுக்கு)த் தோன்றக் கூடும்.

இவ்வாறு நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மனோதத்துவ ரீதியாகக் கணிக்கலாம். நமது தோல்விகளை  மறப்பது நமது இயல்பு அல்ல. நம்மால் செயல் படுத்த முடியாமல் போன தீர்மானங்கள் நம்மை அவ்வளவு சுலபமாக விட்டு விட மாட்டா! சிந்துபாதின் தோளில் ஏறிய கிழவன்போல (முழுக்கதையை அறிய  கடந்த ஐம்பது ஆண்டு தினத்தந்தி இதழ்களைத் தொடர்ந்து படிக்கவும்!) அவை நம்மை அலைக்கழித்துக்கொண்டே இருக்கும். இந்த மன உறுத்தலிலிருந்து மீள ஒரே வழி அதே தீர்மானஙளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதுதான்.

அதே தீர்மானங்களைத் திரும்பத் திரும்பத் துரத்துவதன் விளைவு என்ன என்பதை விளக்க வேண்டியதில்லை. ஸ்டாண்ட் போடப்பட்ட சைக்கிளில் உட்கார்ந்து பெடல் செய்வதுபோல, இருந்த இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்!

அப்படியானால் , புத்தாண்டுத் தீர்மானங்கள் எதுவுமே இனி செய்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை இந்த ஆண்டு செய்து கொள்லலாமா? (இந்தத் தீர்மானத்தில் ஒரு சௌகரியம் என்னவென்றால் இதை வருடா வருடம் புதுப்பிக்க வேண்டியதில்லை.)

தேவையில்லை!

மாறாகக் கொஞ்சம் வித்தியாசமான புத்தாண்டுத் தீர்மானங்களை மேற்கொண்டால் என்ன?

ஐ.நா. சபை ஒவ்வொரு வருடத்தையும் ஒரு ஆண்டாக அறிவிக்கிறது - ஊனமுற்றோர் ஆண்டு, பெண்கள் ஆண்டு, குழந்தைகள் ஆண்டு, முதியோர் ஆண்டு என்று. பல துறைகளிலும்  தன் பணிகள் தொடர்ந்தாலும், ஐ,நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பிரச்னையின் மீது கவனம் செலுத்துவதுபோல....
புத்திசாலிகள் (அதாவது நீங்கள் எல்லோருமே) நான் சொல்லப் போவதை ஊகித்திருப்பீர்கள்.

வாழ்க்கையில் நமக்குப் பல இலக்குகள்: உண்டு. ஒரே நேரத்தில் பல இலக்குகளுக்குக் குறி வைப்பதால், நமது கவனம் சிதறி, முயற்சிகளின் கூர்மை குறைந்து இலக்குகள் நழுவுகின்றன. ஐ.நா. சபையைப் போல் நாமும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலக்கைக் குறி வைக்கலாமே!

உதாரணமாக நமக்கு மேற்படிப்பில் நாட்டம் இருக்கலாம். அத்துடன் இசையில் ஈடுபாடு, வேறு பொழுது போக்குகள் இருக்கலாம். இவற்றில் இந்த அண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறோம் என்று தீர்மானித்துக் கொண்டு, அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவெடுத்தால் அதை நிச்சயம் நம்மால் நிறைவேற்ற முடியும். இந்த விஷயத்தில்  ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேறி விட்டோம் என்றால் அதற்குப் பிறகு அடுத்த ஆண்டு இன்னொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதற்கு இலக்கு நிர்ணயித்துக் கொள்ளலாம்.


நமது முயற்சிகள் நாம் எடுத்துக்கொண்ட இலக்குகளைக் குறி வைத்தே இருக்க வேண்டும் என்பதால், நமக்கு ஆர்வமுள்ள மற்ற விஷயங்களை அடியோடு விட்டு விட வேண்டும் என்பதில்லை. ஐ.நா. சபை உதாரணத்தை மனதில் கொண்டு, எடுத்துக் கொண்ட இலக்கில் இடைவிடாத கவனமும், மற்ற விஷயங்களில் அளவான கவனமும் செலுத்திச் செயல் படலாம்.

சரி, இப்படிச் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்கிறீர்களா?

முதலில் வாழ்க்கையை நம்மால் ஒழுங்காக அமைத்துக்கொள்ள முடியும். வீட்டில் குழந்தைகள் கலைத்த்ப் போட்டவற்றைப் பெரியவர்கள் எடுத்து ஒழுங்காக அடுக்கி வைத்தது போன்ற ஒரு சீரான அமைப்பும், முறையும் இருக்கும்.

இரண்டாவதாக, ஒரு இலக்கில் மட்டும் அதிக கவனம் செலுத்துவதால், நமது மனமும் செயலும் ஒருமுகப்பட்டு அந்த இலக்கை நிச்சயம் அடைய வகை செய்யும். நாம் ஒரு தெளிவான இலக்கை ஏற்றுக்கொண்டால், நம் உள்மனம் அதை அடைவதற்கான பணிகளைத் தேர்ந்தெடுத்த்ச் செய்து இலக்கு நோக்கி நம்மை இயக்கும் என்பது ஒரு மனோதத்துவ உணமை.

மூன்றாவதாக, ஒரு இலக்கை எடுத்துக் கொண்டு அதை நாம் எட்டி விட்டால், பிறகு வேறு எந்த இலக்குகளை எடுத்துக் கொண்டு செயல் பட்டாலும், அவற்றை அடைவது என்பது நமக்கு ஒரு இயல்பாகவே அமைந்து விடும்.



நான்காவதாக, வாழ்க்கையில் சோர்வு நீங்கி, ஒரு புதிய உற்சாகமும், நம்பிக்கையும் நிரம்பி வழியும்.

இந்த வழியை நாம் ஏன் முயன்று பார்க்க்க் கூடாது?

எப்படித் துவங்குவது என்கிறீர்களா?

ஒரு வேலையை முறையாகத் துவங்கினாலே, அந்த வேலை பாதி முடிந்தது போல்தான் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி.

இந்தக் கட்டுரையைப் படிப்பதையே ஒரு துவக்கமாக எடுத்துக் கொண்டு மேலே தொடருங்கள்.

புத்தாண்டு வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. என்று நாம் ஒரு புதிய முயற்சியைத் துவங்குகிறோமோ, அந்த நாளே ஒரு புத்தாண்டின் துவக்கம்தான். எனவே நீங்கள் இப்போதே  துவங்கலாம்.

உங்கள் விருப்பங்கள், லட்சியங்கள், தாகங்கள் என்ன என்று யோசியுங்கள். அவற்றை நிறைவேற்ற இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். முடிந்தால் நீங்கள் செய்த முயற்சிகளைப் பட்டியலிடுங்கள். இவற்றில் நீங்கள் எதை முக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்று திர்மானியுங்கள். அந்த லட்சியத்தை நிறைவேற்ற உடனடியாக என்ன செய்ய முடியும் என்று நினைத்த்ப் பாருங்கள்.



ஒரு விஷயம்.

இவற்றையெல்லாம் நீங்கள் செய்யும்போது உங்களுடன் இரண்டு நண்பர்கள் உடனிருந்தால் நல்லது. ஒரு பேனா, ஒரு நோட்டுப் புத்தகம்.

மனதில் தோன்றும் எண்ணங்களையெல்லாம் எழுதுங்கள். அலசுங்கள். வடிகட்டுங்கள். தேர்ந்தெடுத்தவற்றை வரிசைப் படுத்துங்கள்.

தூக்கம் வரும். வந்தால் உடனே தூங்குங்கள். தூங்கும்போதும், விழித்த பின்னும், சில யோசனைகள் வரும். அவற்றில் சில், மிக அற்புதமாகவும் இருக்கக் கூடும். அவற்றை உட்னே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மனதில் தோன்றும் எல்லா எண்ணங்களையும் விடாமல் குறித்துக் கொள்ளுங்கள். இவற்றில் சில பயனற்றதாக இருக்கலாம் அதுபற்றி அப்புறம் யோசித்துக் கொள்ளலாம். எண்ணங்களத் தொடர்ந்து எழுத்ம்போது மேலும் மேலும் புதிய யோசனைகள் உருவாகும்.

இந்த முயற்சி பிரசவ வேதனை போன்ற ஒரு வேதனையை ஏற்படுத்தும். முயற்சி திருவினையாகும்போது உங்களுக்குக் கிடைக்கும் பரிசும் ஒரு குழந்தை போன்று அருமையானதாக இருக்கும். மெல்லப் புலரும் பொழுதுபோல் ஒரு வாழ்க்கைத் திட்டம் மெல்ல மெல்ல வெளிவரும். 'நண்பர்களின்' உதவியுடன் அதைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.முதலில் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தாலும் ஒரு சில நாட்களில் முழு உருவம் தெரியும்.

அதன்பிறகு வேலை சுலபம்தான். ஐந்தாண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானியுங்கள். பிறகு அடுத்த ஒரு ஆண்டில் என்ன செய்யலாம் என்று தீர்மானியுங்கள். இந்த மாதம் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். அப்புறம் இந்த வாரம். கடைசியாக இன்று என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி. இன்று என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்தீர்களோ அதை இன்றே செய்து முடியுங்கள். 'ஆயிரம் மைல் பிரயாணம் முதல் அடி எடுத்து வைப்பதில்தான் தொடங்குகிறது' என்பது ஒரு சீனப் பழமொழி. எனவே முதல் அடியை நீங்கள் எடுத்து வைத்து விட்டாலே இலக்கு நோக்கிய உங்கள் பயணம் தொடங்கி விட்டது என்று பொருள்!


Monday, August 13, 2012

மாண்பு மிகு மந்திரி

மந்திரியாகி விட்டாலே சங்கடம்தான். இந்த மக்களுக்கு இலவசமாக எவற்றையாவது கொடுத்தாக வேண்டும். அதே சமயம் அவை மற்ற்வர்கள் முன்பே கொடுத்ததாக இருக்கக் கூடாது. அதனால் நான் நிறைய யோசனை செய்து, இதுவரை யாரும் செய்யாத, மக்களுக்கு உண்மையிலேயே பயன்படக் கூடிய சில இலவசத் திட்டங்களை என் ம்னதுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறேன்.

முதலில் மக்களுக்கு வேண்டியது சோறு. அடேடே, அதற்குள் அவசரப்பட்டு, எல்லோருக்கும் இலவசமாகச் சோறு போடப் போவதாக முடிவு செய்து விடாதீர்கள். இன்றைய நமது நாடு என்ன அந்தக் காலத்துச் சோறுடைத்த சோழ நாடா, அல்லது ஆனை கட்டிப் போரடித்த தென்பாண்டிச் சீமையா? தற்போதைய வளர்ச்சி விகிதப்படி, நம் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அதுவரையில் நம் மக்கள் வெறும் வயிற்றோடு எப்படி இருக்க முடியும்? அதனால், ஏழை மக்கள் தங்கள் காய்ந்த வயிற்றில் போட்டுக்கொள்ள வசதியாக, 'இலவச ஈரத்துண்டு வழங்கும் திட்டம்'தான் என் முதல் திட்டமாக இருக்கும்!

ஈரத்துண்டுகளுக்கு நான் எங்கே போவேன் என்று யாரும் யோசிக்க வேண்டாம். கான்ட்ராக்ட் மூலம் காய்ந்த துண்டுகளை வாங்கி, மந்திரியானவுடன் என் வீட்டு முகப்பில், சில (நூறு) கோடி ரூபாய்களில்  நான் கட்டப்போகும், 24 மணி நேரமும் இயங்கும் வண்ண நீரூற்றிலிருந்து வரும் நீரில் அவற்றை நனைத்துத்தான் மக்களுக்கு விநியோகிப்பேன். முதல் சில துண்டுகளை நான் விநியோகித்தவுடன், மற்ற்வற்றை என் வீட்டில் இருப்பவர்களும், கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளும் விநியோகிப்பார்கள்.  அது மட்டும் இன்றி, ஏழை மக்கள், தேவைப்படும்போதெல்லாம் என் வீட்டுக்கு வந்து சிறு கட்டணம் செலுத்தித் தங்கள் காய்ந்த துண்டுகளை மீண்டும் ஈரப்படுத்திக்கொண்டு போகலாம். நான் மந்திரியாக இல்லாவிட்டாலும், மக்கள் இந்ச்த சேவையை என் வீட்டில் பெறலாம். அவர்களுக்கு இந்தச் சேவை ஆயுள் முழுவதும் தேவைப் படுமே!

இடுப்பில் போட்டுக்கொள்ள ஈரத்துண்டு கிடைப்பதால், மக்கள் எப்போதும் பட்டினியாகவே இருந்து விட முடியுமா என்ன? ரேஷனில் போடும் அரிசியின் அளவும் குறைந்து, விலையும் ஏறி விட்டதே என்று வருந்துபவர்களின் குறையைப் போக்குவதற்காக, ஒரு இலவச அரிசித் திட்டமும் உண்டு. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 30 கிலோ அரிசி இலவசமாக - ஆமாம், இலவசமாகத்தான் - வழங்கப்ப்படும். ரேஷன் கடைகளின் இயல்பான பணிக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, இந்த இலவச அரிசி ஒவ்வொரு மாதமும் முப்பத்திரண்டாம் தேதி மட்டும் வழங்கப்படும்!

உணவுப் பிரச்னையைத் தீர்க்க நீண்ட காலத் திட்டங்கள் தேவை என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. நமது வயிற்றின் கொள்ளளவைக் குறைப்பதன் மூலம், நாம் உண்ணும் உணவின் அளவு குறைந்து நிறைய உணவுப் பொருட்கள் மிச்சப்படும். இதனால் அனைவருக்கும் உணவு கிடைக்கும். உணவு உற்பத்தியை அதிகரிக்காமலேயே, அனைவருக்கும் உணவளிக்க வழி வகுக்கும் இந்தப் புரட்சிகரமான திட்டத்தைச் செயல் படுத்த, நான் பல வெளி நாடுகளுக்குச் சென்று விவரம் சேகரித்த பின், நமது மருத்துவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, ஏழைகளின் வயிற்றின் கொள்ளளவைக் குறைக்க இலவச அறுவை சிகிச்சைத் திட்டம் செயல்படுத்தப்படும். (ஏழைகளிடம் இத்திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல வழக்கம் போல் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். குடும்பக் கட்டுப்பாடு, சத்துணவு போன்ற பணிகளில் ஈடுபட்டு மீதமிருக்கும் நேரத்தில் ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவர்!)

வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடுமையைக் குறைக்கும் விதமாக,வேலையில்லா இளைஞர்களுக்கு இலவச இட்லி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், மாதம் ஒரு நாள் வேலையில்லா இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு இட்லி வழங்கப்படும். ஒவ்வொரு இட்லியின் மீதும் எங்கள் தலைவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

உணவுக்குப்பின் உடை. என் பிறந்த நாளுக்காகக் கட்சித் தொண்டர்கள் அடிக்கும் போஸ்டர்கள், என் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.(போஸ்டர்கள் ஒட்டத்தான் நிறையத் தடை இருக்கிறதே!) ஆடையில்லாச் சிறுவர்கள் ஒரு நாளாவது போஸ்டர்களை இடையில் சுற்றிக்கொண்டு மானம் காத்துக் கொள்வதுடன், என் பிறந்த நாள் பற்றிய செய்தியையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதைத்தவிர, எனது கட்சிக்காரர்கள் கிழித்துப் போடும் மாற்றுக் கட்சியினரின் கொடிகளும் என் தொகுதி மக்கள் ஆடையாக அணிய ஏதுவாக அவர்களுக்கு வழங்கப்படும்!


உடைக்குப் பின் வருவது உறைவிடம். புதிதாக வீடுகள் கட்டக் காலி இடம் ஏதும் இல்லை என்பதால், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஏழை மக்கள் குடிசை போட்டுக்கொள்ள இடம் ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்படும். அவர்கள் குடிசை போட்டுக்கொள்ளத் தேவையான ஓலை அல்லது ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள், கல், மண் முதலியவை அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும்.(இவ்வாறு இயற்றப்படும் சட்டத்திற்கு யாராவது நீதி மன்றத்தில் தடை வாங்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல!)

இது தவிர, குடிசைப் பகுதிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டமும் அறிமுகப் படுத்தப்படும். இதற்கு அதிகச் செலவு ஆகும் என்பதால், மூடப்படாத அலுமினியக் கம்பிகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும். மூடப்படாத மின்கம்பியின் பரிசம் பட்டு யாரும் இறந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மெயின் சுவிட்ச் அணைக்கப்படும். (காலை 6 மணியிலிருந்து, மாலை 6 மணி வரை வழக்கம்போல் மின்வெட்டு அமுலில் இருக்கும்!)

கொலை கொள்ளைகள் அதிகரித்து வருவதாக மக்கள் புகார் கூறுவதால், மக்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையில், தேவைப்படுபவர்களுக்கெல்லாம்  இலவசமாகக் கத்தி, துப்பாக்கி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் வழங்கப்படும். அத்ற்குப் பிறகு யாரும் போலீசில் எந்தப் புகாரும் கொடுக்க வழி இருக்காது என்பதுடன், போலீஸ் படை முழுவதையும் அமைச்ச்ர்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்த முடியும்.

'வாழ விடு, அல்லது சாக விடு' என்பது எங்கள் தலைவர் எங்களுக்கு வழங்கிய தாரக மந்திரம். அவரது அறிவுமொழிக்கேற்ப, சாக விரும்புகிறவர்களுக்கு, விரைவில் செயல் பட்டு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வீரியம் மிகுந்த விஷம் இலவசமாக வழங்கப்படும். ஆனால் தற்கொலையைச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால், தற்கொலை செய்து கொள்வதைச் சட்டபூர்வமாக ஆக்கும் விதத்தில் அரசியல் சட்டத்தைத் திருத்தும்படி, (மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி இல்லாத நேரங்களில்) மத்திய அரசுடன் போராடுவோம்.

நான் இதுவரை சொன்னதெல்லாம் ஒரு சாம்ப்பிள்தான்.இன்னும் பல 'புரட்சி இலவசத் திட்டங்கள்' என் மனக்கிடங்கில் புதைந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் இப்போதே சொல்லி விட்டால், அப்புறம் எல்லாவற்றையும் யாராவது காப்பி அடித்து விடுவார்கள்.

எனவே, மற்ற திட்டங்களை நான் மந்திரியாக ஆன பிறகுதான் வெளியிட உத்தேசம். ஆனால் ஒன்று. நான் மந்திரியாக ஆனால், இலவசத் திட்டங்கள் ஆறாக ஓடிக் கடலாகப் பெருகுவது மட்டும் திண்ணம் என்று மட்டும் என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்!




Thursday, June 21, 2012

காலத்துக்கு வணக்கம்


(நேர நிர்வாகம் பற்றிச் சில சிந்தனைகள்)
காலம் என்பது நான்காவது பரிமாணமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் அது நமது கைகளுக்குள் புலப்படாமல் நழுவி விடுகிறது. 'Times slips through your fingers' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது நேரம் நமது விரல் இடுக்குகள் வழியே நழுவி விடுகிறதாம்!

இவ்வுலகில் எப்போதும் நிலைத்திருப்பது, ஆனால் நாம் எப்போதும் இழந்து கொண்டிருப்பது, ஒருபோதும் திரும்பப் பெற முடியாதது காலம் ஒன்றுதான். காலனைச் சிறு புல்லாக மதித்து, அவனைக் காலால் மிதித்து, அவனைக் காலால் சற்றே உதைப்பதாகப் பாடினான் பாரதி - தனக்கு மரண பயம் இல்லை என்பதைக் காட்ட. நாமும் காலத்தை அலட்சியப்படுத்தி மரணத்தை நோக்கி விரைவாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

சரி, காலத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் காலத்தை நிர்வகிக்கலாம். ஒவ்வொரு விநாடியையும் பயனுள்ளதாகச் செய்யலாம். இதை நேர நிர்வாகம் (Time Management) என்பார்கள்.

நேர நிர்வாகம் என்பது பொதுவாக நமது நேரத்தைத் திட்டமிட்டு வீணாக்காமல் பயன்படுத்துவது என்பதையே குறிக்கோளாகக் கொண்டது. ஆனால் இது நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. உலகெங்கும் நேர நிர்வாகம் பற்றி நாள்தோறும் கருத்தரங்குகளும், பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றால் பயன் பெறுபவர் மிகச் சிலரே. சிகரெட், மது போன்ற பழக்கங்களை விட முயன்று தோற்றவர்கள் போல, நேர நிர்வாகத்தைக் கடைப்பிடிக்கப் பலமுறை முயன்று கைவிட்டவர்களே அதிகமாக இருப்பார்கள்!

இதற்குக் காரணம் நேர நிர்வாகம் விதிக்கும் பல கட்டுப்பாடுகளை நம்மால் கடைப்பிடிக்க முடியாமல் போவதுதான்.

எனவே முதலில் இந்தக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதைப் பெரும் பாவமாகக் கருதி நம்மை நாமே நொந்து கொள்ளும் வழக்கத்திலிருந்து நாம் விடுபட வேண்டியது மிகவும் அவசியம்.

கடுமையான கட்டுப்பாடுகளை விட, ஓரளவு மாற்றங்களை அனுமதிக்கக்கூடிய நேர நிர்வாகக் கோட்பாடுதான் அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

இது எப்படி என்பதைச் சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

1) செயல் திட்டங்கள் மிகவும் அவசியம். ஆனால் இவை மாற்ற முடியாத வேத நூல்கள் இல்லை. நமது வசதிக்கு ஏற்பத் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கும் அரசியல் சட்டம் போன்றவைதான் இவை. குறிப்பிட்ட ஒரு திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கால அட்டவணைக்குள் அடங்காது என்றால், திட்டத்தையோ, கால அட்டவணையையோ மாற்றிக்கொள்ளத் தயங்கக்கூடாது.

ஒரு விற்பனைப் பிரதிநிதி ஒரு குறிப்பிட்ட வியாபாரத்தை முடிப்பதற்காக வெளியூருக்கு அனுப்பப்பட்டார். வேலை விரைவில் கட்டாயம் முடிய வேண்டும் என்பதற்காக, அவருக்கு வீட்டிலிருந்து கிளம்புவது முதல் திரும்ப வந்து சேரும் வரை செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலைக்கும் விரிவான அட்டவணை கொடுக்கப்பட்டு, நிகழ்ச்சி நிரலில் சிறு மாறுதல் இருந்தாலும், அவரது மேலதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டளைகள் பெற வேண்டும் என்பது அவருக்குக் கொடுக்கப்பட்ட செயல் குறிப்பு. நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக,அவர் ரயிலிலேயே தன்னைத் தயார் செய்து கொண்டு, எட்டு மணிக்கு ரயில் போய்ச் சேர்ந்ததும், ஸ்டேஷன் கான்டீனிலேயே காலை உணவு அருந்தி விட்டு, ஆட்டோ பிடித்துப் போய் ஒன்பது மணிக்குள் குறிப்பிட்ட நபரைச் சந்திக்க வேண்டும் என்பது செயல் திட்டம்.

திட்டத்தில் சிறு மாறுதல் இருந்தாலும் மேலதிகாரியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அறிவுரையின்படி, விற்பனைப் பிரதிநிதி ஸ்டேஷனுக்கு வெளியே வந்து டெலிபோன் இருக்கும் இடத்தைத் தேடிப் பிடித்து மேலதிகாரிக்கு ஒரு டிரங்க் கால் போட்டார் (வசதி வருவதற்கு முந்திய காலம் அது) ஒரு மணி நேரம் காத்திருந்து மேலதிகாரி லயனில் கிடைத்ததும், 'சார், ஸ்டேஷன் கான்டீன் மூடியிருக்கிறது. இப்போது என்ன செய்வது?' என்றார்!

செயல் திட்டம் என்பது இது போல் புனித நூலாக இருக்கக் கூடாது.

'ஒரு தம்ளர் பால் தவறுதலாகக் கீழே கொட்டிக் கழிவு நீர்க் குழாய்க்குள் சென்று விட்டால், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் கீழே கொட்டிய பாலில் ஒரு துளியைக்கூட உங்களால் திரும்பக்கொணர முடியாது' என்பார் டேல் கார்னகி. இழந்த நேரமும் அப்படித்தான். வீணான நேரமும் வீணானதுதான். வீணான நேரத்தைப்பற்ரி வருந்திக் கொண்டிருந்தால் இன்னும் சிறிது நேரம்தான் வீணாகும். எனவே நிகழ்ந்து விட்ட இழப்பை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து எதிர்காலத்துக்கான பாடம் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

3) 'நான் எந்தச் செயலையுமே நாளைக்குத் தள்ளிப்போட மாட்டேன், அதை நாளை மறுநாள் செய்து கொள்ளலாம் என்கிறபோது' என்றார் ஆஸ்கார் ஒயில்ட் என்ற அறிஞர் வேடிக்கையாக. ஆனால் இதில் ஒரு ஆழமான உண்மை இருக்கிறது.

எதையுமே ஒத்திப் போடக்கூடாது என்பது நேர நிர்வாகத்தில் ஒரு தாரகமந்திரம்.

ஆனால் சில சமயம் இந்த மந்திரத்தை மீற வேண்டியதும் நேர நிர்வாகத்தில் ஒரு தந்திரம். ஒரு வேலையை இன்று செய்து முடிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு உதவ வேண்டிய ஒரு நபரால் இன்று வர முடியவில்லை. எப்படியும் ஒத்தி வைக்கக்கூடாது என்று பிடிவாதமாக அந்த வேலையைச் செய்ய முற்படுவதால் நேர விரயம்தான் ஏற்படும். வேலையை ஒருநாள் தள்ளி வைத்துக் குறிப்பிட்ட நபரின் ஒத்துழைப்புடன் செய்வதால் நேரம்,பொருள்,சக்தி ஆகியவை வீணாவதைத் தவிர்ப்பதுடன் வேலையையும் சிறப்பாகச் செய்து முடிக்கலாம்.


ஆனால் அந்த வேலை அன்றைக்கே செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருந்தால் (உதாரணம் - ஒரு முக்கியமான டெண்டர் அனுப்புவதற்கான கடைசித்தேதி அன்றுதான்), எப்படியும் அந்த வேலையைச் செய்துதான் தீர வேண்டும்.

4) வேலைகளைத் தாமதப்படுத்த வேண்டிய வேறு சில சந்தர்ப்பங்களும் உண்டு. கடிதம் எழுதித் தபாலில் சேர்க்க இன்று நேரம் போதுமானதாக இருக்காது என்று தோன்றினால், கடிதத்தை அடுத்த நாள் நிதானமாக எழுதுவதே சிறப்பு. (இன்றைய இன்டர்னெட் உலகத்தில் கடிதம் எழுதுவது என்பது எதோ கற்கால வழக்கமாகத் தோன்றலாம். ஆனால் அஞ்சல் அலுவலகங்கள் இன்ன்னும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்ரன; அஞ்சல் பெட்டிகளும் கடிதங்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன!

அலுவலகத்துக்கு அவசரமாகக் கிளம்புகிறீர்கள். 9.28 ரயிலைப் பிடிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. அடுத்த ரயில் 9.38க்குத்தான் என்றால் அவசரமாக ஓடி ரயிலைத் தவற விடுவதைத் தவிர்த்து, கிடைத்திருக்கும் அதிக அவகாசத்தைப் பயன்படுத்தி சற்று நிதானமாகவே நடக்கலாமே!

5) செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதில் அலுப்பும் சலிப்பும் ஏற்படுவது இயல்பு. இதைத் தவிர்க்க இரண்டு முறைகளைக் கையாளலாம்.

செய்ய வேண்டிய வேலைகளை
1) மிகவும் (செய்ய) விரும்புபவை
2) ஓரளவு செய்ய விரும்புபவை
3) செய்ய விரும்பாதவை
என்று மூன்று வகைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

என் பாட்டி குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது, தட்டில் இருந்த சாதத்தை இரண்டாகப் பிரித்து, இதில் பிடித்த பங்கு, பிடிக்காத பங்கு என்று இரண்டாகப் பிரித்துக்கொள்ளச் சொல்வார். முதலில் கதைகள் சொல்லி, பிடிக்காத பங்கைக் குழந்தைக்கு நைச்சியமாக ஊட்டி விடுவார். பிறகு பிடித்த பங்கைக் குழந்தையிடம் காட்டி 'இதுதான் உனக்குப் பிடித்ததாயிற்றே. சாப்பிட்டு விடு' என்று சொல்லி அதையும் உண்ண வைத்து விடுவார். குழந்தை எந்த வித ஊக்குவிப்புமின்றி தட்டைக் காலி செய்து விடும்!

அதுபோல, நமக்குச் செய்வதில் அதிகம் ஆர்வமில்லாத, ஆனால் செய்ய வேண்டிய வேலைகளை முதலில் செய்து விட்டால், நமக்கு ஆர்வம் உள்ள வேலைகளைச் செய்வது சுலபமாகி விடும். வேலைக்கு விண்ணப்பம் போட்டு அலுத்துப் போயிருக்கும் இளைஞன், தனக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களை முதலில் அனுப்பி விட்டால், அதற்குப் பிறகு காதலிக்குக் கடிதம் எழுதுவது என்ற வேலயைத் தானே செய்து முடித்து விடுவான்!

6) சில சமயம் இதற்கு நேர்மாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் - குறிப்பாக அலுவலகப் பணிகளில். எனக்குத் தெரிந்த அதிகாரி ஒருவர் கடைப்பிடிக்கும் முறை இது. மேஜை மீது குவிந்து கிடக்கும் ஃபைல்களில், எளிதான, விரைவில் பார்த்து முடித்து விடக்கூடிய ஃபைல்களை முதலில் பார்த்து முடித்து விடுவார். பிறகு நிறைய ஃபைல்களைப் பார்த்து முடித்து விட்ட உற்சாகத்தில், மீதமுள்ள கடினமான ஃபைல்களைப் பார்ப்பதில் அவருக்குச் சலிப்பே ஏற்படாதாம்!

7) மேலே சொன்ன இரண்டு முறைகளில் எதைக் கடைபிடித்தாலும், ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்: செய்ய வேண்டிய வேலையைச் செய்துதான் தீர வேண்டும்.

தன்னம்பிக்கை எழுத்தாளர் கோப்மேயர் இவ்வாறு கூறுகிறார்:
செய்தே தீர வேண்டிய காரியத்தை,
செய்ய வேண்டிய நேரத்தில்,
உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்,
செய்து முடிப்பது
என்ற நியதியைப் பின்பற்றினால்,
வெற்றி நிச்சயம்.

எனவே நீங்கள் மனதில் பதித்துக்கொள்ள வேண்டிய தாரக மந்திரங்கள் இரண்டு:
1) செய்ய வேண்டிய செயலை உரிய நேரத்தில் செய்வது
2) முக்கியமான விஷயத்துக்கு முதலிடம் கொடுப்பது.

8) ஒரு செயல் குறித்து உங்களுக்கு ஒரு உந்துதல் ஏற்பட்டால் மற்ற எல்ல வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, அதை உடனே செய்து விடுங்கள். ஏனெனில் அத்தகைய உந்துதல் ஏற்படும்போது உங்கள் செயல் திறன் மிகவும் கூர்மையாக இருக்கும். உந்துதல், உற்சாகம், சக்தி, ஈடுபாடு எல்லமே உயர் நிலையில் இருக்கும்போது, உங்களால் மிகச் சிறப்பாகச் செயல்பட முடியும். அந்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டு விட்டால், மீண்டும் அத்தகைய உந்துதல் நிலை எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாது. எழுத்து, கலை, விளம்பரத்துறை போன்ற சிந்தனை சார்ந்த செயல்களில் ஈடுபட்டிருபவர்கள் இந்த உந்துதல் தருணங்களை அதிகம் சந்தித்திருப்பார்கள். எனினும் உடல் உழைப்பு தேவையான வேலைகளுக்கும் இது பொருந்தும். சிலருக்கு மூட் வந்தால் மணிக்கணக்கில் தோட்டவேலை செய்வார்கள். அல்லது வீட்டைச் சுத்தப்படுத்துவதிலோ, ஒழுங்கு படுத்துவதிலோ அல்லது அலங்கரிப்பதிலோ ஈடுபடுபவர்களும் உண்டு.

9) 'என்னால் முடியாது' என்று சொல்லப் பழகுங்கள். நம்மில் பலருக்கு ஒரு பலவீனம் உண்டு. மற்றவர்கள் ஏதாவது கேட்டால், உடனே சரியென்று சொல்லி விடுவது. மற்றவர்களுக்கு உதவுவதில் தவறில்லை. நம்மால் எந்த அளவுக்கு உதவ முடியும், அவ்வாறு உதவுவது நம் வேலைகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற கேள்விகளுடன் அவர்களுக்கு உதவுவது அவசியம்தானா என்பதையும் யோசிக்க வேண்டும். நாம் பலவீனர்களாக இருந்தால் நம்மை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள முயல்வார்கள். இதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நம் உதவி தேவைப்படுபவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் மட்டும்தான் உதவி செய்ய வேண்டும். அவசியமற்ற வேலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதால் நம் நேரம் வீணாவதுடன், நமக்கு வேறு சில பிரச்னகளும் ஏற்படலாம். வேண்டாவெறுப்பாக ஒருவருக்கு உதவி செய்யும்போது, நாம் ஏன் இந்தப் பொறுப்பை ஏஏற்றுக்கொண்டோம் என்று நம் மீதே நமக்குக் கோபம் வரும். இத்தகைய மன அழுத்தங்கள் நமக்குத் தேவைதானா?

சில சமயம், மற்றவர்களின் அழைப்பை ஏற்று அவர்கள் வீட்டுக்குப் போவது, நமக்கு ஆர்வம் இல்லாத திரைப்படம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப்போவது இவற்றையும் தவிர்க்க வேண்டும். 'எனக்கு இதில் ஆர்வம் இல்லை' என்று பணிவாக, கேட்பவர் மனம் புண்படாத விதத்தில் மறுத்து விடலாம். அல்லது வேறு வேலை இருப்பதாகச் சொல்லி நழுவி விடலாம்.

10) ஒரு வேலையைச் செய்யும்போது அதனுடன் தொடர்புடைய வேறு சில வேலைகளைச் சேர்த்துச் செய்வது என்ற நடைமுறையைப் பழக்கிக் கொள்ளுங்கள். சற்றுத்தொலைவில் உள்ள ஒரு இடத்துக்குப் போகும்போது, அதற்குப் பக்கத்தில் நமக்கு ஏதாவது வேலை இருக்கிறதா என்று ஒரு நிமிடம் யோசித்தால் சில விஷயங்கள் மனதில் உதிக்கக் கூடும். கடைக்குப் போகும்போது, வழியிலோ பக்கத்திலோ இருக்கும் லாண்டிரியில் போட வேண்டிய துணிகளை எடுத்துச் சென்று போட்டு விட்டு வ்ரலாம். ஒரு இடத்துக்க்க் கிளம்புவதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்தால் பயனுள்ள சில சிந்தனைகள் தோன்றும். கடைக்குப் போகும்போது அங்கே அருகில் இருக்கும் நூலகத்தைப் பார்த்த பிறகுதான், 'ஆஹா! நூலகத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டிய புத்தகங்களை எடுத்து வந்திருந்தால், அவற்றைத் திருப்பிக் கொடுத்திருக்கலாமே!' என்று தோன்றும். எனக்குத் தெரிந்த ஒரு சிறு நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் யாராவது வெளியே கிளம்பினால் அவர்களைச் சற்று நேரம் காத்திருந்து போகும் வழியிலோ அல்லது போகும் இடத்துக்கு அருகிலோ வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்று நன்கு யோசித்து விட்டுத்தான்  கிளம்ப அனுமதிப்பார். அவரது இந்த அணுகுமுறையால், ஊழியர்களே இது போன்று சிந்தித்துச் செயல்படக் கற்றுக்கொண்டனர். ஆயினும் அவசரமாகப் போகும்போது இந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும்.

கடைசியாக ஒரு விஷயம். காலத்துக்கும் ஓய்வு தேவை! எனவே எப்போதும் நேரத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே இருக்காதீர்கள். பிசியாக இருக்கும் நேரங்களில் காலத்தைப் பற்றிய உணர்வுடனே இருப்பதுபோல், ஓய்வாக இருக்கும் நேரத்தில் காலத்தைக் கொஞ்சம் மறந்திருங்கள். அப்போதுதான் காலத்துக்கும் உங்கள் மீது ஒரு பிடிப்பு ஏற்படும்!

Saturday, January 14, 2012

வதந்திகளைப் பரப்புங்கள்!

பொதுவாக இந்தியர்களுக்கு  sense of humour (நகைச்சுவை உணர்வு) குறைவு என்று ஒரு கருத்து உண்டு. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால் நம்முடைய sense of rumour ஐ (வதந்தி ஆர்வம்) யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

குழந்தைகளுக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் அதிகமாக உற்பத்தியாவது வதந்திகள்தான்.  மின் தட்டுப்பாடு, தொழிலாளர் பிரச்னை, மூலப்பொருள்  பற்றாக்குறை போன்ற எவற்றினாலும் உற்பத்தி பாதிக்கப்படாத பொருள் ஒன்று உண்டென்றால், அது வதந்திதான். இதற்கான மூலப்பொருளுக்குப் பஞ்சமே இல்லை (சில சமயம் மூலப்பொருளே தேவைப்படுவதில்லை!) உற்பத்திக்குத் தேவையான உழைப்பு சம்பந்தப்பட்டவர்களால் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தேவையான சக்தியும் தானே உற்பத்தியாவதுடன், எடுக்க எடுக்கக் குறைவதே இல்லை. சொல்லப்போனால், வதந்தியை உருவாக்கவும், பரப்பவும் பயன்படுத்தப்படும் சக்தியைச் சேமிக்க முடியுமானால், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கூடச் செய்யலாம்!

வதந்தித் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம், கதவடைப்பு எதுவும் கிடையாது. வதந்திகளை உருவாக்குபவர்கள் (producers), விநியோகிப்பவர்கள் (distributors), பரப்புபவர்கள் (dealers), செவிமடுப்பவர்கள் (consumers) ஆகியோரிடையே நிலவும் நல்லுறவு மற்ற தொழில், வர்த்தகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறது. வேறு எந்தப் பொருளுக்கும் இல்லாத ஒரு  சிறப்பு வதந்திக்கு உண்டு. வதந்தியை நுகர்பவரே (consumer) பரப்புகிறவராகவும் (distributor) ஆகும்  வாய்ப்பைப்  பெறுகிறார். வேறு  எந்த  நுகர்வோருக்கும்  இந்தச்  சலுகை  கிடைக்காது. இந்தச் சலுகையினால், நுகர்பவர் மனத்திருப்தி என்கிற லாபத்தைப் பெறுகிறார்.

தேவையான தருணங்களில் உற்பத்தியைப் பெருக்க, வதந்தித் தொழிற்சாலைகள் தயங்குவதே இல்லை.

முன்பெல்லாம் வதந்தி என்பது அருவருக்கத்தக்கதாகக் கருதப் பட்டது. ஆனால் இப்போது அப்படி  இல்லை. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் (எந்த மொழிப் பத்திரிகையானாலும் சரி), அதில்  ஒரு சில வதந்திகளாவது கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஆனால் வதந்திகள் அங்கே பலவிதமான கௌரவமான பெயர்களில் வெளியிடப்படுகின்றன. 'கிசுகிசு,' 'காதில் விழுந்தவை,' 'ரகசியம் பரம ரகசியம்,' 'கேள்விப்படுகிறோம்' போன்ற பகுதிகள் இல்லாத பத்திரிக்கைகளைப்  பார்ப்பது அரிது.  செய்திப் பத்திரிகைகளும் சளைத்தவை அல்ல. அவற்றில், 'அதிகாரபூர்வமற்ற தகவல்கள்,' 'எங்களுக்குக்  கிடைத்த தகவல்படி,' 'பெயர் சொல்ல விரும்பாத ஒரு தலைவர் அல்லது அதிகாரி கூறியது,'  என்ற  பலே வடிவங்களில் வதந்திகள் பிரசுரமாகின்றன.  

இவற்றிலிருந்தெல்லாம்  நாம்  தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வதந்திகளை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்! 

வதந்திகள் வாழ்க்கைக்குச் சுவையூட்டுகின்றன, உற்சாகமளிக்கின்றன, சுவாரஸ்யம் தருகின்றன. வதந்திகள் இல்லாவிட்டால் வாழ்க்கை மிகவும் டல் அடிக்கும். பொதுவாக மனிதர்களின்  கவனம் கூர்மையடைவதே வதந்திகளைக் கேட்கும்போதுதான். வதந்திகள் கவனத்தில் பதிவதுபோல் செய்திகள் பதிவதில்லை அல்லவா?

வதந்திகளால்   சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவதில்லையா என்ற கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான். இதற்கு நியாயமான பதிலும் உண்டு. ஆமாம். உண்மைதான். அதற்கு என்ன செய்ய முடியும்? வதந்திகளைக் கேட்டு ரசித்து மகிழ்பவர்களோடு ஒப்பிட்டால், வதந்திகளால் பாதிக்கப்படுபவர்கள் மிகச் சிலர்தான். எனவே ஜனநாயக மரபுகளின்படி, பெரும்பான்மையோருக்கு எது உகந்ததோ அதை ஏற்றுக்கொள்வதுதானே  வழி? எனவே பாதிக்கப்படுபவர்களின் பலவீனமான எதிர்ப்புப் குரலை அலட்சியம் செய்ய வேண்டியதுதான்!